Tuesday, February 14, 2006

மரத்திடம் சில கேள்விகள்!




இறந்த பின்னும் ...
மண்ணைக் கவ்வி காலூன்றி,
பலநூறு கைகளை வெளியினுள் பரப்பி,
என்ன தேடுகிறாய்?
எதை அடைய இவ்வளவு பிரயத்தனம்…
வானைத் தொடவா?
இல்லை, வான்வழியே பயணித்து
கதிரவனைத் தொடவா?
தலைவிரிகோலமாய் நின்று
குளிரை பயமுறுத்துகிறாயா?
அதனை விரட்டுகிறாயா?
அதனோடு போரிடுகிறாயா?
பகீரதன் தவம் நின்றது போல
ஒற்றைக் காலை ஊன்றி,
கைகளைக் கூப்பி,
எதையும் பொருட்படுத்தாது நிற்கிறாய்...
எதற்காக இந்தத் தவக்கோலம்...
உயிர்வேண்டித் தவமிருக்கிறாயா?
அழுது புரண்டாலும் ,
தவமாய்த் தவமிருந்தாலும்...
வேண்டுவது கிடைக்க,
காலம் வரும்வரை பொறுத்தே தீரவேண்டும்
என்ற பாடம் சொல்லவா?
நான்கு திங்கள் செத்துப் பிழைக்கிறாய் ...
உன் வேண்டுதல் ...
வெம்மையின் வருகையால் நிறைவுறுகிறது...
உயிர் பெற்றதைக் கொண்டாட ,
ஊரெல்லாம் அறிவிக்க,
பூக்களை உடுத்திக் கொள்கிறாய்...
வண்ணங்களில் ஜொலிக்கிறாய்
வாசனை பரப்புகிறாய்...
ஒவ்வொரு வருடமும்(வசந்தமும்) புதிதாய்ப் பிறக்கிறாய்!
அதே பழைய உடலுடன்... !!!

Friday, February 03, 2006

இலக்கணக் குறிப்புகள்
வாழ்க்கை - வினைத்தொகை
காதல் - முரண்தொடை
மரணம் - வினைமுற்று

வாழ்க்கை
தேடுதலில் தொலைந்து போவது...
பின்...
தொலைந்ததைத் தேடுவது...

Friday, January 20, 2006

பருவங்கள் ... சில கிறுக்கல்கள் !


இலையுதிர்காலம்

=================






1
Getting old colorfully ...
இதுதானோ?





2
பச்சை நிற ஃபர்தாவை களைந்து
பட்டாம்பூச்சிகளாய் வண்ணம் பூண்டன
இந்த வாசமில்லாப் பூக்கள் ...
இது.. இலையுதிர்காலமல்ல...
இலைமலர்காலம்..


வசந்த காலம்

===========




1
உயிர்த்தெழுதலைக் கொண்டாட ...
விழாவெடுக்கின்றன மரங்கள்...
=======================

2
பூக்கள் மலர்ந்த பின்னே...
மெல்ல தலை தூக்கும் இலைகள்...
இலைக்குப் பிறகு பூ யார் சொன்னது?

========================


குளிர்காலம்

=========







1
குளிரும் காலை ...
சூரியனை வரவேற்க ஜன்னல் திரை விலக்கினேன்...
வெண்பஞ்சு மேகக்கூட்டம் வாசலில்..
இரவெல்லாம் பெய்த பனிக்குவியல்...
=======================================

2
சூடு தாங்காமல் உருகி நின்றது
கையில் விழுந்த நட்சத்திரம் ...
இல்லை.. பனித்துகள்!
=======================

3
இலைகளை உதிர்த்து...
பசுமையைத் தொலைத்து...
விதவையான மரங்களுக்கு ...
வெள்ளாடை போர்த்துகிறது...
பனி...
==================

4
தும்பைப் பூமாரி பொழிகிறது ...
வழியங்கும் வெண்பட்டாடை விரிப்பு...
தேவதைகள் உடலெங்கும் பூக்களை ஏந்தி ....
சாலையோரம் வரிசைகட்டி நிற்கின்றன ....
வெண்முத்துப் பல்லக்கில் ...
மெல்ல ஊர்வலம் போகின்றேன்...
பனிமழை பெய்கிறது...
=================






5
Icecream சாப்பிட்ட சிறுகுழந்தையாய்
அங்கங்கே அப்பிக்கொண்டு சொட்டும்
பனியைத் தாங்கி நிற்கும் மரம்...
*************************************